கோவில் அமைப்பு : திருநாவுக்கரசரால் உழவாரப் பணி செய்யப்பட்ட ஆயங்களில் இதுவும் ஒன்று. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடம் முதலில் மகாமண்டபம், பின் அர்த்த மண்டபம், அதன்பின் கருவறையில் மூலவர் சிவலோகநாதர் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்திருக்கிறது. அம்பாள் சௌந்தர்ய நாயகி நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் மழை பொழிகிறாள். ஆலயத்தின் வெளியே பிரம்ம தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது. அற்புத வேலைபாடு கொண்ட கோபுரம், மற்றும் அனைத்து கோஷ்டமூர்த்தங்கள் உள்ளடங்கிய ஆலயம் சிவலோகநாதர் ஆலயம். சுவாமி சந்நிதிக்கு பின்பக்கம் கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் கிழக்குச் சுற்றில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் வீற்றுள்ளனர். தென்முகக் கடவுள் தட்சினாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த வண்ணம் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். திண்டி, முண்டி என்கிற இறைவனின் காவலர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி உள்ளனர். பிரமன், இந்திரன் ஆகியோரும் இத்தலத்தில் சிவலோகநாதரை வழிபட்டுள்ளனர்.
தல வரலாறு: துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்கிற மன்னன் வேட்டைக்கு இங்கு வந்த போது இங்கிருந்த குளத்தில் ஓர் அழகிய தாமரை மலரைக் கண்டான். அதை தனது சேவகர்கள் மூலம் பறித்து வரச் சொன்னான். அவர்களால் அதைப் பறிக்க முடியாமல் போகவே, தானே சென்று அம்மலரைப் பறிக்க முயன்றான். தாமரை மலர் அவன் கைக்கு அகப்படாமல் குளத்தில் சுற்றி வர, கோபம் கொண்ட மன்னன் அம்மலர் மீது குறி வைத்து அம்பு விட்டான். மலர் மீது அம்பு பட்டவுடன் குளத்து நீர் முழுவதும் செந்நீராயிற்று. அதைக் கண்டு பயந்த மன்னன் அருகில் சென்று பார்த்த போது தாமரை மலரில் ஒரு லிங்கம் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தை எடுத்து குளக்கரையில் அதை ஸ்தாபித்து ஒரு கோவிலும் கட்டினான். லிங்கத்தின் மீது அம்பு தைத்த தழும்பு இன்றும் இத்தல மூலவரின் முடியில் காணலாம். இதனால் சுவாமி முடீசுவரர் என்றும் முண்டி பூஜித்தமையால் முண்டீசுவரர் என்றும் அழைக்கப் படுகிறார்.
திருநாவுக்கரசர் இயற்றிய இத்தலத்திற்கான பதிகம் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.