முல்லைவனநாதர் திருக்கோவில், திருக்கருகாவூர்
சிவஸ்தலம் பெயர்: திருக்கருகாவூர்
இறைவன் பெயர்: முல்லைவன நாதர்
இறைவி பெயர்: கர்ப்ப ரக்ஷாம்பிகை
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1, திருநாவுக்கரசர் - 1
முல்லைவனநாதர் ஆலயம் புகைப்படங்கள்



எப்படிப் போவது
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையிலுள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 7 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து வடகிழக்கே 20 கி.மீ. தொலைவிலும, இத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கருகாவூர் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலமாக இத்தலத்தை சுலபமாக அடையலாம்.
பயண குறிப்பு
பாபநாசம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் செல்பவர்கள் சாலியமங்கலம் மார்க்கம் செல்லும் பேருந்தில் ஏறி திருக்கருகாவூர் கோவில் ஆர்ச் ( Arch ) என்ற பேருந்து நிறுத்ததில் இறங்கி 450 மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். கோவிலின் வெளியே பூஜை பொருட்கள் வாங்க கடைகள் இருந்தாலும் விலை சற்று அதிகம்.
மகப்பேறு மற்றும் சுக பிரசவ வேண்டுதலுக்கு செல்பவர்கள், கோவிலின் உள்ளேயுள்ள அறநிலையதுறை சார்பில் நடத்தப்படும் கடையில் வாங்கி கொள்ளலாம்.
பாபநாசம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் அடிக்கடி இருந்தாலும், கோவிலில் இருந்து மீண்டும் பாபநாசம் மற்றும் கும்பகோணம் செல்ல சாலியமங்கலத்தில் இருந்து 30 நிமிட இடைவெளியில் வரும் பேருந்துகளை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது.
ஆலய முகவரி
திருக்கருகாவூர்
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614302
ஆலய நேரம்
காலை: 5:30 - 12:30
மாலை: 4:00 - 8:00
மார்கழி மாதம் மட்டும் அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மீண்டும் 4.00 மணிக்கு திறக்கப்பட்டு 8.00 மணிக்கு மூடப்படும்
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
1 | திருசக்கரப்பள்ளி - 13 கிமி | |
2 | திருப்பாலைத்துறை - 8 கிமி | |
3 | திருநல்லூர் - 8.7 கிமி | |
4 | ஆவூர் பசுபதீச்சரம் - 8.2 கிமி |
சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள திருத்தலம்
சிவபெருமான் உமாதேவியுடனும் முருகனுடனும் இருக்கும் திருக்கோலம் சோமஸ்கந்தர் அருட்கோலம். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பு சில சிவாலயங்களில் தான் காணப்படுகிறது. இம்மூன்று சந்நிதிகளையும் ஒருசேர வலம் வர சுற்றுப் பிரகாரமும் உண்டு.
கோவில் அமைப்பு
கோபுரங்கள்
460 அடி நீளமும், 285 அடி அகலமும் உள்ள இக்கோவிலுக்கு கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரமும் தென் திசையில் மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது. கிழக்கு கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால உருவாக்கப்பட்ட ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் 3 நிலைகளை உடைய 2-ம் கோபுரம் வாயில் வரை நீண்ட மண்டபம் காணலாம். 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், இரட்டை நந்திகள் ஆகியவற்றைக் காணலாம்.
சந்நிதிகள்
இங்கிருந்து உட்பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால் நாம் 63 மூவர் சந்நிதி, நால்வர் சந்நிதி, நிருதி விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானை உடனாய ஆறுமுகர் சந்நிதி மற்றும் மகாலட்சுமி சந்நிதி ஆகியவற்றைக் காணலாம்.
மூலவர் சந்நிதி
கருவறைக்குள் கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாகத் தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக் கொடிகளின் தழும்பு இருக்கக் காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் தீராத வியாதிகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்டு அறிந்த உண்மை. வெளியில் இருந்து கொண்டுவரும் புனுகு சுவாமிக்கு சாத்த அனுமதி இல்லை. தேவஸ்தானமே அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு புனுகு சாத்துகிறது.
அம்பாள் சந்நிதி
இறைவியின் சந்நிதி சுவாமி சந்ந்நிதிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்து இறைவி கருகாத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கபடுகிறாள். குழந்தைப் பேறு கிட்டவும், திருமணம் நடைபெறவும் இங்கு அம்பாள் கருகாத்த நாயகியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.
பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள்
பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள் என்று குறிப்பிடப்படும் 5 சிவஸ்தலங்களை ஒரே நாளில் 5 கால பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தால் இப்பிறவியில் செய்த சகல பாபங்களும் நீங்கி மறு பிறவி இல்லா நல்வாழ்வு கிட்டும் என்று அகஸ்திய முனிவர் கூறியுள்ளார். அந்த வகையில் திருக்கருகாவூர் ஸ்தலம் விடியற்காலை உஷத்காலம் (காலை 5-30 மணி முதல் 6 மணி வரை) வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும்.
தலம் பற்றிய புராண வரலாறு
நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் வசித்து வந்தனர். ஒரு முறை நிருத்துவ முனிவர் ஒரு முக்கிய காரணமாக் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் மனைவி வேதிகை அப்போது கர்ப்பமுற்று இருந்தாள். அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை மிகவும் களைப்புற்று வீட்டில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். ஊர்த்துவ முனிவர் என்ற மற்றொரு தவசீலர் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். வெய்யில் காலம் காரணமாக் அவரும் மிகவும் களைப்புற்று வீட்டில் இருப்பவர்களால் உணவும் தண்ணீரும் கிடைக்கும் என்று கருதி குரல் கொடுத்து கூப்பிட்டார். ஆனால் யாரும் வெளி வராதது கண்டு உள்ளே எட்டிப் பார்க்க வேதிகை அவருக்கு எதிர்புறமாக திரும்பிப் படுத்து உறங்கக் கண்டார். வேதிகை கர்ப்பமுற்று களைப்பால் படுத்து இருப்பதை அறியாத அவர் கோபமுற்று அவளை சபித்துவிட்டு சென்று விட்டார். விழித்து எழுந்த வேதிகை பார்ப்பதற்குள் அவர் வெகு தூரம் சென்று விட்டார். முனிவரின் கோபத்திற்கு ஆளாகி விட்ட அச்சத்தில் அவள் முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள். இறைவியும் வேதிகை பக்திக்கு மெச்சி அவள் கருவைக் காப்பாற்றி அருள் புரிந்தாள். ஊர் திரும்பிய நிருத்துவ முனிவர் நடந்தவற்றைப் பற்றி கேள்விப்பட்டு இறைவியை வணங்கி இத்தலத்திற்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள் யாவருக்கும் சுகப்பிரசவம் ஆகும்படியும், அவர்கள் கருவை காத்து ரட்சிக்கும் படியும் வரம் வேண்டினார். அவ்வாறே இறைவியும் வரம் அளித்து அருள் புரிந்தாள். அன்று முதல் இத்தலத்து இறைவி கரு காத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.
பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்
மேலும் புகைப்படங்கள்


