வைகல்நாதர் திருக்கோவில், திருவைகல் மாடக்கோவில்
சிவஸ்தலம் பெயர்: திருவைகல் மாடக்கோவில்
இறைவன் பெயர்: வைகல் நாதர், சண்பகாரண்யேஸ்வரர்
இறைவி பெயர்: கொம்பியல்கோதை, வைகல் நாயகி
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
வைகல்நாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி பழியஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகல் கிராமத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு வைகல் நாதர் திருக்கோயில்
வைகல் கிராமம்
மேலையூர் அஞ்சல்
வழி ஆடுதுறை
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612101
ஆலய நேரம்
காலை: 6:30 - 12:00
மாலை: 4:00 - 7:00
பயண குறிப்பு
இவ்வாலயம் கோவில் மெய்காப்பாளர் அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய இயலும். எனினும், ஆலயம் உள்ளடங்கிய பகுதியில் இருப்பதால், முன்கூட்டியே தொடர்பு கொண்டு, காலை வேளையில் செல்வது நல்லது. பேருந்து அல்லது ஆட்டோ வசதி ஆலயத்திற்கு அருகில் இல்லை என்பதனால், தனிப்பட்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு செல்வது உகந்தது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருநாகேஸ்வரம் - 12 கிமி | |
| 2 | திருவிடைமருதூர் - 12 கிமி | |
| 3 | ஆடுதுறை - 9 கிமி | |
| 4 | திருநீலக்குடி - 3 கிமி | |
| 5 | திருநல்லம் - 6 கிமி | |
| 6 | திருக்கோழம்பம் - 5.2 கிமி |
தல வரலாறு
வைகல் கிராமத்தின் சிறப்பு
வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன:
- ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம்
- பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம்
- ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்
சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும்.
கோச்செங்கட் சோழன் மாடக்கோவில்
கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான்.
முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.
புராண வரலாறு
முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சணபகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள்.
திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார்.
சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவில்களையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.
வழிபாட்டின் சிறப்பு
தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.
கோவில் அமைப்பு
கோபுரம் மற்றும் நுழைவாயில்கள்
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம்.
நந்தி மண்டபம்
முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது.
கருவறை மற்றும் சந்நிதிகள்
மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது.
பிற சந்நிதிகள்
- வள்ளி தெய்வானை சமேத முருகர்
- ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு
- காகவாகனர் சனீஸ்வரர் - தனி சந்நிதி
- விநாயகர்
- தட்சிணாமூர்த்தி
சம்பந்தர் பெருமான் தொடர்பு
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
சம்பந்தர் பதிக பாடல்
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தின் 4-வது பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், இறைவி கொம்பியல் கோதை பெயரையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
"கொம்பியல் கோதை முன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே."
மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
மேலும் புகைப்படங்கள்