அக்னீசுவரர் திருக்கோவில், திருஅன்னியூர்
சிவஸ்தலம் பெயர்: திருஅன்னியூர்
இறைவன் பெயர்: அக்னீசுவரர்
இறைவி பெயர்: பார்வதி
பதிகம்: திருநாவுக்கரசர் - 1
அக்னீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ். புதூர் என்ற இடத்திற்கு வந்து, அங்கிருந்து தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று அங்கிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் சென்றால் திருஅன்னியூர் ஊரையடையலாம். கும்பகோணத்தில் இருந்து அன்னியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று அங்கிருந்து வடக்கே 3 கி.மீ. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம். திருக்கருவிலி கொட்டிட்டை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து வடமட்டம் வழியாக 4 கி.மீ. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அன்னியூர்
அன்னியூர் அஞ்சல்
வழி கோனேரிராஜபுரம்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612201
ஆலய நேரம்
காலை: 7:00 முதல் இரவு 8:00 வரை
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருவைகல் மாடக்கோவில் - 6.9 கிமி | |
| 2 | திருநல்லம் - 3.5 கிமி | |
| 3 | திருக்கோழம்பியம் - 9 கிமி | |
| 4 | சிறுகுடி - 9.8 கிமி | |
| 5 | திருவீழிமிழலை - 4.2 கிமி | |
| 6 | திருக்கருவிலி கொட்டிட்டை - 6.6 கிமி |
வரைபடம் – அக்னீசுவரர் திருக்கோவில், திருஅன்னியூர்
தல வரலாறு
தல அறிமுகம்
திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. காவிரி தென்கரைத் தலமான இந்த திருஅன்னியூர், கும்பகோணம் - காரைக்கால் சாலையிலுள்ள எஸ். புதூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஸ்தல வரலாறு
சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான். அச்சமயம் இத்தலத்திற்கும் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று பெயர் பெற்றது.
அக்னிதேவன் தனக்கு அருள் புரிந்த அக்னீஸ்வரரை வணங்கி, இத்தலத்திற்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு தன் தொடர்புடைய உஷ்ண ரோகங்கள் நீங்கவும், நற்கதி பெறவும் அருள்புரியுமாறு இறைவனை வேண்டினான். எனவே உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.
தலச் சிறப்பு
பார்வதி தேவி காத்தியாயன முனிவரின் மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருமணம் கூடி வரும் என்பது இன்றுமுள்ள நம்பிக்கை.
கோவில் அமைப்பு
சிறிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாக இருப்பதைக் காணலாம். பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. அதையடுத்துள்ள முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. நேரே இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். கருவறை வாயில் இருபுறமும் துவார பாலகர்கள் கல் சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராசர் திருமேனிகள் மிக்க அழகுடையவை.
பதிகம்
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகம்
அக்னீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்