தல வரலாறு: பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடக்கப் போகும் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற அர்ஜுனன் இத்தலத்தில் ஈசனை நோக்கி தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. தன்னத் தாக்க வந்த அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. சிவபெருமான் அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரம் அளித்து மறைந்தார். அர்ஜுனன் (விஜயன்) ஈசனை பூஜித்த தலமாதலால் இத்தலம் திருவிஜயமங்கை என்று பெயர் பெற்றது. அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை லிங்கத்தின் மீது காணலாம்.
கோவில் அமைப்பு: ஆலயத்திற்கு கோபுரமில்லை. மதிற்சுவருடன் கூடிய ஓர் நுழைவு வாயில் உள்ளது. நுழைவு வாயிலின் மேல் ரிஷபத்தின் மீது சிவனும், பார்வதியும் அமர்ந்தபடி காட்சி அளிககும் சுதைச் சிற்பத்தைக் காணலாம். வாயில் வழியாக உற்றே நுழைந்தவுடன் நேரே ஒரு சிறிய சந்நிதியில் விநாயகர் காட்சி தருகிறார். அவருக்குப் பின்னால் பலிபீடமும் அடுத்து நந்தி மண்டபமும் உள்ளன. மூலவர் விஜயநாதேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் மங்கைநாயகி தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுர ஆவுடையார் மீது அருள்பாலிக்கிறார். அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். நால்வருக்கும் தனி சந்நிதி உள்ளது.
இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன. ஊரின் பெயர் கோவந்தபுத்தூர். விசயமங்கை என்பது கோயிலின் பெயராகும். ஒரு பசு (கோ) இலிங்கத் திருமேனியின்மீது தன் மடியிலுள்ள பாலைச் சொரிந்து வழிபட்ட காரணத்தால் கோவந்தபுத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது. ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் என்பதையும், கோவிலின் பெயர் விசயமங்கை என்பதையும் அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 3-வது பாடலில் குறிப்பிடுகிறார்.
கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில் வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை உள்ளிடத்து உறைகின்ற வுருத்திரன் கிள்ளிடத் தலையற்றது அயனுக்கே.
ஆலயத்தின் நுழைவாயில்
கிழக்கு வெளிப் பிரகாரம்
நந்தி மண்டபம், பலிபீடம்
நால்வர் சந்நிதி
மங்கை நாயகி சந்நிதி வாயில்
விஜயநாதேஸ்வரர் சந்நிதி வாயில்
மூலவர் விஜயநாதேஸ்வரர்