தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் |
இறைவன் பெயர் | வர்த்தமானேஸ்வரர் |
இறைவி பெயர் | கருந்தாழ்குழலி, மனோன்மனி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் இத்தலம் உள்ளது. திருப்புகலூர் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. |
ஆலய முகவரி | நிர்வாக அதிகாரி அருள்மிகு வர்த்தமானேஸ்வரர் திருக்கோவில் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் தேவஸ்தானம் திருப்புகலூர் அஞ்சல் வழி திருக்கண்ணபுரம் நாகப்பட்டிணம் வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609704 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும், நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறம் உள்ளது. இங்கு இறைவன் வர்த்தமானேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். சந்நிதிக்குள் நுழைந்ததும் இடதுபுறம் முருகநாயனார் சந்நிதியைக் காணலாம். வர்த்தமானேஸ்வரரை சம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார். அவரின் பதிகக் கல்வெட்டு சந்நிதியில் உள்ளது. வர்த்தமானேஸ்ரர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். இறைவனையும், அம்பாள் மனோன்மணியையும் தரிசிக்க இயலாதவாறு இரு சந்நிதிகளும் இருட்டடித்து காணப்படுகின்றன. ஆலய நிர்வாகிகள் தகுந்த ஏற்பாடுகள் செய்து வெளிச்சம் வர விளக்குகள் பொருத்தி வைத்தால் நன்றாக இருக்கும்.
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் தலத்தை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பதிகம் பாடி இருந்தாலும், அதே ஆலயத்திற்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தை திருஞானசம்பந்தர் மட்டுமே பதிகம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதிகத்தின் 3-வது மற்றும் 5-வது பாடலில் 63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்து வந்ததை சம்பந்தர் தனது பதிகத்தில் 5-வது பாடலில் குறிப்பிடுகிறார்.
5. ஈசன் ஏறமர் கடவுள் இன்னமும் எந்தை யெம்பெருமான் பூசு மாசில் வெண்ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரில் மூசு வண்டறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடிமேல் வாச மாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே. பொழிப்புரை: www.thevaaram.org அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அந்த மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர், விடையேறு உடையவர், இனிய அமுதம் போன்றவர், எந்தை, எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர்.