A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

அமிர்தகலசநாதர் திருக்கோவில், திருக்கலயநல்லூர்

சிவஸ்தலம்

திருக்கலயநல்லூர் (தற்போது சாக்கோட்டை என்று வழங்குகிறது)

இறைவன்

அமிர்தகலச நாதர்

இறைவி

அமிர்தவல்லி

பதிகம்

சுந்தரர் - 1

அமிர்தகலசநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்.

ஆலய முகவரி
அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில்
சாக்கோட்டை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612401
ஆலய நேரம்

காலை: 10:00 முதல் 11:00 வரை
மாலை: 5:00 முதல் 6:00 வரை

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – அமிர்தகலசநாதர் திருக்கோவில், திருக்கலயநல்லூர்
தல வரலாறு

ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்றார் என்பதை சுந்தரரின் பதிகம் 10-வது பாடல் மூலம் அறியலாம்.

சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

கோவில் அமைப்பு
கோபுரம் மற்றும் பிரகாரங்கள்

இது ஒரு கிழக்கு நோக்கிய கோவில். முதலில் நம்மை வரவேற்பது மதிற்சுவருடன் உள்ள ஒரு நுழைவாயில். நுழைவாயில் மேற்புறம் அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். அதைக் கடந்து உள்ளே சென்றால் 3 நிலை இராஜ கோபுரம்உள்ளது. நுழைவாயிலுக்கும் இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது.

மூலவர் மற்றும் கருவறை

உள்ளே கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

சிறப்புச் சிற்பங்கள்

ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள்சிற்பங்கள் பார்த்து ரசிக்கத் தக்கது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது — வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கொண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார்.

இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மன் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

தலத்தின் இயற்கை வளம் — சுந்தரர் வர்ணனை

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் பதிகத்தின் 10-வது பாடலின்படி இத்தலம் சுந்தரர் காலத்தில், அதாவது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், பெருங்கோயில் அமைப்புடையதாய் இருந்தது என்பதும், குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நான்கு புறத்திலும் சூழப்பெற்று அமைந்திருந்தது என்பதும் புலனாகிறது.

சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் காரணமாக ஓசை எழுந்ததால், கரிய எருமைகள் மிரண்டு அரிசலாற்றின் நீரில் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும் சுந்தரர் வர்ணிக்கிறார்.
பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, மல்லிகைக் கொடி, சண்பகமரம் என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம் மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூர் என்றும் வர்ணிக்கிறார்.
வெண்மையான கவரி மயிரும், நீலமான மயில் இறகும், வேங்கை மரம், கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில், வண்டுகள் சேர்த்த தேனின் வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூர் என்றும் பலவாறு தலத்தின் இயற்கை வளத்தை வர்ணிக்கிறார்.
பதிகம்
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. குரும்பைமுலை மலர்க்குழலி
அமிர்தகலசநாதர் ஆலயம் புகைப்படங்கள்