A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

சிவலோகநாதர் திருக்கோவில், திருமுண்டீச்சரம்

சிவஸ்தலம்

திருமுண்டீச்சரம் (தற்போது கிராமம் என்று வழங்கப்படுகிறது)

இறைவன்

சிவலோகநாதர், முண்டீஸ்வரர்

இறைவி

சௌந்தர்ய நாயகி, காணார்குழலி அம்மை

பதிகம்

திருநாவுக்கரசர் - 1

சிவலோகநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

விழுப்புரத்தில் இருந்து அரசூர் வழியாக திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலை வழியில் உள்ள கிராமம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் ஆலயம் அருகிலேயே உள்ளது. விழுப்புரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் வழியாக விழுப்புரம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை செல்லும் பேருந்துகளில் சென்று கிராமம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் செல்லலாம்.

நடு நாடு - பயண குறிப்புகள்

முதலில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில் ஏறி அரகண்ட நல்லூர், திருக்கோவிலூர் தரிசித்து விட்டு, திருக்கோவிலூரில் இருந்து கடலூர் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் பேருந்தில் ஏறி முதலில் இடையாறு தலத்தையும், பிறகு திருவெண்ணெய் நல்லூர் சென்று, அங்கிருந்து திருமுண்டீச்சரம் சென்று தரிசனம் செய்து அரசூர் வழியாக மீண்டும் விழுப்புரம் அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்
வழி உளுந்தூர்பேட்டை
கிராமம் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203

ஆலய நேரம்

காலை :  7:00 - 9:00

மாலை :  5:00 - 7:00

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – சிவலோகநாதர் திருக்கோவில், திருமுண்டீச்சரம்
கோவில் அமைப்பு
கோவிலின் சிறப்பு - உழவாரப் பணி

திருநாவுக்கரசரால் உழவாரப் பணி செய்யப்பட்ட ஆயங்களில் இதுவும் ஒன்று. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடம் முதலில் மகாமண்டபம், பின் அர்த்த மண்டபம், அதன்பின் கருவறையில் மூலவர் சிவலோகநாதர் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்திருக்கிறது.

அம்பாள் சந்நிதி

அம்பாள் சௌந்தர்ய நாயகி நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் மழை பொழிகிறாள்.

தீர்த்தம்

ஆலயத்தின் வெளியே பிரம்ம தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது.

கோஷ்டமூர்த்தங்கள்

அற்புத வேலைபாடு கொண்ட கோபுரம், மற்றும் அனைத்து கோஷ்டமூர்த்தங்கள் உள்ளடங்கிய ஆலயம் சிவலோகநாதர் ஆலயம். சுவாமி சந்நிதிக்கு பின்பக்கம் கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் கிழக்குச் சுற்றில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் வீற்றுள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்

தென்முகக் கடவுள் தட்சினாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த வண்ணம் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். திண்டி, முண்டி என்கிற இறைவனின் காவலர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி உள்ளனர். பிரமன், இந்திரன் ஆகியோரும் இத்தலத்தில் சிவலோகநாதரை வழிபட்டுள்ளனர்.

தல வரலாறு
சொக்கலிங்க மன்னன் கதை

துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்கிற மன்னன் வேட்டைக்கு இங்கு வந்த போது இங்கிருந்த குளத்தில் ஓர் அழகிய தாமரை மலரைக் கண்டான். அதை தனது சேவகர்கள் மூலம் பறித்து வரச் சொன்னான். அவர்களால் அதைப் பறிக்க முடியாமல் போகவே, தானே சென்று அம்மலரைப் பறிக்க முயன்றான.

தாமரை மலர் அவன் கைக்கு அகப்படாமல் குளத்தில் சுற்றி வர, கோபம் கொண்ட மன்னன் அம்மலர் மீது குறி வைத்து அம்பு விட்டான். மலர் மீது அம்பு பட்டவுடன் குளத்து நீர் முழுவதும் செந்நீராயிற்று. அதைக் கண்டு பயந்த மன்னன் அருகில் சென்று பார்த்த போது தாமரை மலரில் ஒரு லிங்கம் இருக்கக் கண்டான்.

அந்த லிங்கத்தை எடுத்து குளக்கரையில் அதை ஸ்தாபித்து ஒரு கோவிலும் கட்டினான். லிங்கத்தின் மீது அம்பு தைத்த தழும்பு இன்றும் இத்தல மூலவரின் முடியில் காணலாம். இதனால் சுவாமி முடீசுவரர் என்றும் முண்டி பூஜித்தமையால் முண்டீசுவரர் என்றும் அழைக்கப் படுகிறார். இத்தலம் சிவலோகநாதர் அல்லது முண்டீஸ்வரர் என இரு பெயர்களால் அழைக்கப்படுகிறது. தற்போது கிராமம் என்று வழங்கப்படுகிறது. திருநாவுக்கரசர் இயற்றிய இத்தலத்திற்கான பதிகம் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் பெருமான் இத்தலத்தை பதிகத்தில் பாடி சிறப்பித்துள்ளார்.

சிவலோகநாதர் ஆலயம் புகைப்படங்கள்